5. (1) வாழ நினைத்தால் வாழலாம்
இரு நாட்கள் துவாரகா வேறு சிந்தனை எதற்கும் இடங்கொடுக்காமற் படிப்பில் மனதைச் செலுத்தத் தொடங்கி யிருந்தாள். தன் அறைக்குள் தாறுமாறாகக் கிடந்த புத்தகங்கள், தளபாடங்கள், பைகள், பொம்மைகள் எல்லாவற்றையும் அடுக்கி, தேவைப்படாதவற்றை அகற்றி, ஒழுங்காக்கும் முயற்சியிலும் இறங்கியிருந்தாள். இதனால் வெளி எண்ணங்கள் அவள் மனதில் எழச் சந்தர்ப்பம் வரவில்லை.
குமரன், துவாரகாவைத் தொலைபேசியில் அழைக்க, பிறகு கதைக்கிறேன் என்று வார்த்தைகளைச் சுருக்கிக் கொண்டாள். சில நாட்கள் கழித்து இருவரும் சந்தித்தார்கள். குமரனின் சிற்றுந்துக்குள் ஒரு ஜேர்மனியப்பெண் இருந்தாள்.
'வா போகலாம்!' வழக்கம்போல குமரன் துவாரகாவை அழைத்தான்.
'எனக்கு நேரமில்லை!' என்று அவள் திரும்பிப்போக முற்பட்டாள்.
'ஏன்? வா, டிஸ்கோவுக்குப் போவம்!' என்று அவள் கையைப் பிடித்தான்.
சிற்றுந்துக்குள் இருந்த ஜேர்மனியப்பெண்ணைக் காட்டி, 'அவளோடு போ! நான் வரவில்லை.' துவாரகா மறுத்தாள்.
'நீ ஒரு கிழமையாக வரவில்லை, இவள் வந்தாள். நீ வாறதென்றால் இவளை இறக்கிக் கலைத்து விடுகிறேன்!'
சிற்றுந்துக்குள் இருந்தவளும் அவளைப் போன்ற ஒரு மாணவி, ஜேர்மன்பிள்ளை.... இந்த நாட்டில் இது சாதாரணமான ஒரு விடயம்...'
'கோவிக்கிறியோ?' குற்றமிழைத்தவன் போல் துவாரகாவை, தன்பக்கம் இழுக்கப் பல முயற்சிகள் செய்தான்.
'குமரன்! நான் இனிமேல் ஒன்றுக்கும் வரமாட்டன், ரெலிபோனும் எடுக்க வேண்டாம்.' அவள் போய்விட்டாள்.
போயிட்டுவாறன் என்று கூட அவள் சொல்லவில்லை, குமரன் பல தடவைகள் போட்டுவாறன் என்று ஜேர்மன்மொழியிற் சொல்லியும் அவள் திரும்பிப் பார்க்கவில்லை.
5. (2) வாழ நினைத்தால் வாழலாம்
தமிழினி இன்ரநெற்றிலிருந்து எடுத்துக்கொடுத்த வீடுகளில் ஒரு வீடு சதாவுக்குப் பிடித்துக் கொண்டது. 'வாடகைக்கு அல்லது விற்க' என்று இருந்தது.
நல்ல இடம், கீழே கடையாகவும் மேலே வீடாகவும் பாவிக்கக் கூடிய பெரிய வீடு. இரு கார் விடக்கூடிய அகலமான கார்க் கொட்டகை, நிலமும் போதியளவு இருந்தது. விலையும் மிக மலிவு... வங்கியில் கடன் எடுப்பதுபற்றி அங்கு சென்று ஆலோசனை கேட்டான்.
வேலையில்லை, தனியாள், கஸ்டம் என்று, யோசிக்காமலே அந்த வங்கி அலுவலகர் கூறிவிட்டார்.
வங்கிக்கு வெளியே வந்தான், நகைக்கடையின் முன்னால் இருந்த கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தான்.
'பூதம்' என்று சுரேன் பயந்து அலறியது நினைவுக்கு வந்தது.
சதா என்றால் தாடி மீசை நினைவுக்கு வரும். இது ஒரு கௌரவம் என்று அவன் நினைப்பதுண்டு.
'ஒரு குழந்தை பார்த்துப் பயந்து நடுங்குகிற ஒரு கௌரவம் எனக்குத்தேவையா?' நினைத்துப் பார்த்தான்.
மீண்டும் அதே மிதியுந்தின் 'கிறீச்' ஒலி, 'மாமா!' தமிழியின் அன்பான அழைப்பு.
'என்ன செய்யிறீங்கள்....? வடிவா இருக்கிறீங்களா என்று கண்ணாடியில் பார்க்கிறீங்களா! மாமி உங்களை விரும்பிவிட்டா, இல்லாட்டி நானே உங்களை விரும்பியிருப்பன்...' கள்ளமில்லாமல் அவள் சொன்ன வார்த்தைகள் அவன் கண்களிற் கண்ணீரைச் சுரக்க வைத்தன.
வங்கியில் இருந்தவன் எனக்கு வட்டம்போட்டு வெளியே அனுப்பு கிறான்.
இவள் எனக்கு நூறு மார்க்ஸ் போடுகிறாள்.
டேய் சதா! நீ திருந்தவேண்டும்.... நெஞ்சுக்குள் ஒரு குரல் ஒலிக்கத் தொடங்கியது.
'வீட்டுக்கு வாங்கோ!'
'கோவிக்காதை, இண்டைக்கு வரமாட்டன்!'
'ஏன் மாமா?' அவள் முகத்தில் கவலை தெரிந்தது.
'முதலில் சலூனுக்குப்போய், இதுக்கெல்லாம் ஒரு வழி பார்க்கப் போறேன்' என்று தாடியைத் தடவிக் காட்டினான்.
'வாங்கோ நானும் வாறன்! எந்தச் சலூனுக்கு....!'
'நான் முடிவெட்டிவிட்டு, ஒரு பிறெண்டையும் சந்திக்க வேணும்... நீ போ!' அவள் தன் கூட வருவதை அவன் விரும்பவில்லை.
'தமிழினி வளர்ந்தபிள்ளை.... தோற்றத்திலும் அவளை, அவள் வயதைவிடக் கூடத்தான் மதிப்பார்கள். தன்னுடன் அவள் வருவதை யாராவது பார்த்தால் தேவையற்ற கதைக்கு இடங் கொடுக்கிறதாய் முடியும்' என்று அவன் பயந்தான்.
அவளும் பிடிவாதம் செய்யவில்லை, 'ஓகே! பிறகு சந்திப்போம்' என்றவள், வீடு தேடிய விடயம் நினைவுக்குவர, வீடு என்னமாதிரி இன்ரநெற்றிலிருந்து எடுத்தவை பற்றி விசாரித்தீங்களா...?' ஆர்வமுடன் கேட்டாள்.
சதா நடந்ததை அவளிடம் கூறினான்.
'ஒரு வீடு நல்ல பொருத்தமாக இருக்கு.... வங்கியிலை கடன் தரமுடியாது என்று சொல்லிப்போட்டினம்!'
'ஏன் தரமுடியாதாம்?'
வங்கிஅலுவலகர் கூறிய பதிலை அவளிடம் சதா கூறினான். அதைக் கேட்டுவிட்டு, 'வாங்கோ நான் கதைக்கிறன்!' என்றவள் கைத்தொலைபேசியை எடுத்து, எண்களை மிக விரைவாக அழுத்தினாள்.
யாரோ சிநேகிதியாய் இருக்க வேண்டும்... அவள் கதைத்த விதத்தைப் பார்த்து முடிவு செய்தான் சதா.
கதைத்து முடித்துவிட்டு, 'வாங்கோ வங்கிக்கு!' என்ற தமிழினி, 'மனேச்சரோடை கதைச்சனான், வரச் சொன்னவர்... வாங்கோ!' என்று அவனை அழைத்தாள்.
சதாவுக்கு வியப்பாக இருந்தது. வங்கி மனேச்சருடன் கதைச்சவளா, என்ன துணிவு இந்தக்காலத்துப் பிள்ளையளுக்கு!'
என்ன திறமை...! நியாயத்துக்குப் போராடும் துடிப்பு....!
வங்கி முகாமையாளர் மிகவும் நல்லவர், வரவேற்று, பெயர் விபரங்களை விசாரித்து, சதா வாங்க நினைத்த வீட்டைப் பற்றியும் கேட்டார். பின் சதாவுக்குக் கடன் மறுத்த அலுவலகரை அழைத்து, அவனுக்குக் கடன் வழங்க ஏற்பாடு செய்யும்படி பணித்தார்.
5. (3) வாழ நினைத்தால் வாழலாம்
குமரன் துவாரகாவை விடுவதாக இல்லை, வேறுநாட்டுப் பெண்கள் பலருடன் சிநேகிதம் இருந்தபோதும் துவாரகாவில் ஓரளவு அன்பு அவனுக்கு இல்லாமலில்லை. அவளை மீண்டும் சமாதானப்படுத்த அவன் முயற்சிகள் எடுத்தான். பலன் அளிக்கவில்லை, மிரட்டத் தொடங்கினான். 'அப்பாவிடம் சொல்லப் போகிறேன், கூடியெடுத்த படங்களைக் காட்டப் போகிறேன்' என்று பயமுறுத்தினான்.
துவாரகா பணியவில்லை.
தன்னுடன் கூட வந்தபோது, அவள் சாப்பிட்டது, குடித்தது, சிற்றுந்தில் போனது, படம் பார்த்தது, நுழைவுப்பணம் செலுத்தியது... எல்லாம் பத்தாயிரம் ஈரோ, அதனைத் திருப்பித் தரும்படி கேட்டான்.
'நீ செலவழித்துவிட்டு, என்னைக் கேட்டால்.... நான் என்ன கடனோ வாங்கினனான்? நான் வேண்டாம் வேண்டாமென்று சொல்ல, நீ வாங்கித்தந்து, தேவையில்லாமற் செலவழித்துவிட்டு, என்னைக் கேட்கிறாய்?' என்று துவாரகா பதில் சொன்னாள். அவளுக்கு உள்ளுரப்பயம் வளரத் தொடங்கியது.
'அது கடன்தான், நீ தரத்தான் வேணும், இல்லாட்டி உன்ரை வீட்டிலே சொல்லுவேன், அவர்கள் தரட்டும்!'
'வேண்டாம்... வேண்டாம்!' பதறித் துடித்தாள் துவாரகா.
'சரி, சரி அழாதை! வழக்கம்போல என்னோடை வா! ஒரு பிரச்சனையும் நான் தரமாட்டன், இல்லாட்டி நான் விடமாட்டன்!'
துவாரகாவுக்கு நெஞ்சு படபடத்தது. 'விளையாட்டுத்தனமாகக் கூடத்திரிந்ததற்கு, கோலாவோ ஐஸ்கிறீமோ சாப்பிட்டதற்கு பத்தாயிரம் ஈரோ கேட்கிறான்.... இப்படி எத்தனை பேருக்குத் தினமும் செலவழிக்கிறான், இப்போ இப்படிக் கேட்டால் என்ன பதில் சொல்வது?' கலங்கிப் போனாள்.
அவளின் குழப்பத்தையும் பயத்தில் நடுங்குவதையும் பார்த்த அவன், 'சரி இன்றைக்கு வீட்டுக்குப் போ! ஆனால் நாளைக்குக் கட்டாயம் வரவேண்டும், இல்லாட்டி கடனைத் திருப்பித் தரவேண்டும்!' என்று கூறிவிட்டுப் போய்விட்டான்.
துவாரகாவுக்குப் பயத்திற் காய்ச்சலே வந்துவிட்டது. அழுதுகொண்டு போய் வீட்டிற் படுத்திருந்தாள்.
துவாரகா அன்று வராதது கண்டு, தமிழினி தொலைபேசி எடுத்தாள்.
'வரவுமில்லை, இன்ரநெற்றிலும் காணவில்லை, கைத்தொலைபேசி நிற்பாட்டியிருக்கு!' குறைப்பட்டாள் தமிழினி.
அழுகையுடன் துவாரகா கூறுவதைக் கேட்டு, தமிழினி அவளது வீட்டுக்கு வந்து,
'நீ பயப்படாதை!' தைரியமும் ஆறுதலும் கூறினாள்;.
'ஒன்றுக்கும் பயப்படத் தேவையில்லை, நான் இருக்கிறன், வெருட்டி, மிரட்டி உன்னை வழிக்குக் கொண்டு வரலாம் என்று நினைக்கிறான், இப்படியான ஆட்களுக்கு நல்லபாடம் படிப்பிக்க வேண்டும். இனிமேற் தனிய ஒருஇடமும் போகாதை! கொஞ்ச நாளிலை அவனுக்குப் புத்தி புகட்டுவம்.... ஓ.கே!'
துவாரகாவுக்குத் தமிழினியின் உற்சாகமான ஆறுதல் வார்த்தைகள் நெஞ்சுக்குத் துணிவை வரவழைத்தன. 'இவள் போன்ற நண்பி ஒருத்தி இருந்திருந்தால் குமரனுடன் இப்படியொரு பழக்கம் ஏற்படச் சந்தர்ப்பமே வந்திருக்காது' என்று நினைத்தாள்.
'கட்டாயப்படுத்தி அன்பாக வைத்திருக்க முடியுமா? என்ன மனிதன் இவன்? பத்தாயிரம் ஈரோவுக்குக் கள்ளக்கணக்குச் சொல்லுறான்.'
மனதுக்குள் உறுமிக்கொண்டாள். எனினும் அப்பாவுக்குச் சொல்லி, வீட்டிலே பூகம்பம் வெடிக்க வைத்துவிடுவானோ? என்ற பீதி உள்ளுரக் குளவி போலக் குத்தி, அவளை வேதனைப் படுத்திக் கொண்டிருந்தது.
5. (4) வாழ நினைத்தால் வாழலாம்
சதா வீடு வாங்கப்போவது, வங்கியில் கடன் சரிவந்தது போன்ற விடயங்களைத் தமிழினி சொல்லக்கேட்டு, பூங்கோதை மனம் மிக மகிழ்ந்தாள்.
சலூனுக்குப் போக இருந்ததையறிந்து, தங்கள் மீது சதா கொண்டிருக்கும் அன்பைக் கண்டு, இனந்தெரியாத இன்பம் அவள் நெஞ்சிற் பரவிப் புத்துணர்வை ஏற்படுத்தியது.
'பிள்ளையைப் படிப்பித்து உயர்ந்த நிலைக்கு ஆளாக்க வேண்டும். எல்லாப்பிள்ளைகளையும் போல அவனும் சந்தோசமாக இருக்கவேண்டும். எல்லாவற்றையும் விட தலையிடி யாயிருக்கும் யூகன்ட்அம்ற் அதிகாரிகளின் பிரச்சனையிலிருந்து விடுபடவேண்டும்....' என்று நினைத்தவளுக்கு, சதாவுடன் கதைக்க வேண்டும்போலிருந்தது.
தொலைபேசி எண்களை விரல்களாற் தேடி அழுத்தினாள்.
பெண்ணின் குரல் மறுமுனையில் ஒலித்தது. ஜேர்மனியப் பெண்ணாக இருக்க வேண்டும்.... யார் என்று கேட்டதற்கு, நீ யார் என்று திருப்பிக் கேட்டாள்.
எதிர்கால மனைவி என்று சொன்னதற்கு, விசரோ என்று விழுந்து விழுந்து சிரித்தாள். அப்போ சதா வந்து, தொலைபேசியை வாங்கி, 'ஹலோ!' என்றான்.
பூங்கோதை என அறிந்ததும் சதா தலையிலே கையை வைத்தான்.
'யார் அந்தப் பொம்பிளை...?' பூங்கோதையின் குரலில் கவலையும் கோபமும் கலந்திருந்தது.
'சிநேகிதி...!'
'என்ன சிநேகிதி...?'
'பழைய சிநேகிதி!'
'இந்த நேரத்திலை, தனியா இருக்கிற உங்கடை வீட்டிலை அவளுக்கு என்ன வேலை...?'
'பூங்கோதை, அநாவசியமாகக் கோபப்படாதை!'
'போங்கோ! இனி உங்களை நான் நம்பத் தயாரில்லை, குடிப்பழக்கந்தானே.... சொல்லித் திருத்தலாம் என்ற நம்பிக்கை யோடை இருந்தனான்.... இன்னும் என்னென்ன பழக்கமெல்லாம்; பழகியிருக்கிறீங்களோ தெரியாது!'
'இல்லை பூங்கோதை, நீ நினைக்கிறது தப்பு....' என்று அவன் விளக்கம் சொல்வதற்குள், அவள் இணைப்பைத் துண்டித்துக் கொண்டாள்.
'இதுவேறை புதுப்பிரச்சனை....' என்று கவலையுடன் தலையை ஆட்டிச் சோர்வுடன் கதிரையொன்றிற் போய் உட்கார்ந்தான்.
பூங்கோதையோ எண்ணச்சூழலிற் சிக்கி நம்பிக்கை இழந்தவளாய் தவித்தாள்.
'நல்லவர் போல், கொள்கை தவறாதவர் போல் கதைத்துவிட்டு ஏன் இப்படித் தலைகீழாக நடக்கிறார்? கண் சுகமில்லாதவள் என்று, நம்பவைத்து ஏமாற்றிவிடலாம் என நினைக்கிறாரோ....?' அவள் மனதில் பூதாகாரமான எண்ணங்கள் வளர்ந்து குரல்வளையை நெரிக்குமாற்போலத் திணறடித்தன.
'அண்ணனிடம் போய்ச் சொல்லி, திருமணத்தை நிறுத்தி விடலாமா? பிள்ளை வேறு அவரைப் பார்த்துப் பூதம் என்று அழுகிறான்! ஆராயாமல் உடனே ஒரு முடிவுக்கு வருவது சரியா...?
தாடிமீசையெல்லாம் வழிக்கப் போகிறார்... வீடு வாங்க முடிவு செய்திருக்கிறார்... சொந்தத்தொழிலும் செய்ய யோசிக்கிறார் என்றெல்லாம் தமிழினி சொன்னாளே! இதெல்லாம் எங்களுக் காகத்தானே செய்கிறார்;... அவரைச் சந்தேகப்படுவது சரியா?' என்று ஒரு முடிவுக்கும் வரமுடியாமற் குழம்பிப்போய் நின்றாள்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen