Donnerstag, 31. Mai 2012

பகுதி 4






4. (1)  வாழ நினைத்தால் வாழலாம்



வேலைத்தளத்தில் மேலதிகாரி குருவுக்கு, தொலைபேசி என்று அறிவிக்க, அவனும் சென்று கதைத்தான்.

மறுமுனையில் மனைவி நிலா. மகன் உருத்திரா ஸ்கூட்டரிலிருந்து விழுந்து, கால் முறிந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டதை அறிவித்தாள். விடயத்தைச் சொல்லி, லீவு எடுத்துக் கொண்டு  மகனைப் பார்க்க ஓடிவந்தான் குரு.

பிள்ளைக்கு ஒரு துன்பம் என்றால் பெற்றமனம் படும்பாடு, தவிக்கும் தவிப்பு கொஞ்சநஞ்சமா?

உருத்திரா, அவன் செய்வதெல்லாம் நேர்மாறாகத்தான் இருக்கும். ஒரு செயல்கூட தாய், தகப்பன் சந்தோசப்படும்படி செய்ய வேண்டுமென்று நினைக்கமாட்டான்.

மூத்தமகன் அவன், குரு அவனிடமிருந்து நிறைய எதிர்பார்த்தான். ஒவ்வொரு தாயும் தந்தையும் தங்கள் பிள்ளைகளிடமிருந்து எதிர்பார்க்கும் நியாயமான ஆசைதான் அவனுக்கும் இருந்தது.

சொல்லிச் சொல்லி நாக்கும் நரம்பும் தேய்ந்ததேதவிர, உருத்திராவிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

அம்மாவின் செல்லப்பிள்ளையாக இருந்து, இப்ப அவவின் சொல்லும் கேட்காமல் புறக்கணிக்குமளவுக்கு அவன் பழக்கங்கள் திசைமாறிவிட்டன.

என்ன செய்ய? ஆசைமகன்.... மூத்தமகன்.... செய்வதைப் பார்த்துக்கொண்டு, பேசாமல் இருப்பது என்ற முடிவோடு குரு பல மாதங்கள் மௌனமாகவே இருந்து வந்தான்.

வைத்தியசாலையில் மகன் என்றதும் 'பெற்ற மனம் பித்து' என்றது உண்மை என்பது, அவன் நெஞ்சம் துடித்த துடிப்பில் இருந்து உணரமுடிந்தது.

மயக்க நிலையில் உருத்திரா இருந்தான். சத்திரசிகிட்சை முடிந்து, காலில் பெரிய கட்டுத்தெரிந்தது. நிலா அழுத கண்ணுடன் அங்கு நின்று கொண்டிருந்தாள். சாதாரண முறிவு தான், கொஞ்சக்காலம் போனால் வழக்கம்போல நடக்க முடியும் என்று டாக்டர் சொன்னதாக மனைவி கூற, மகனுக்குப் பக்கத்தில் போய் அவன்  முகத்துடன் முகத்தை வைத்துக் கொஞ்சி அழுதான் குரு.

நிலாவுக்குக் கணவனின் உருக்கமான செய்கை நெஞ்சை உலுப்பி, கண்களில் நீர் கொப்பளிக்க வைத்துவிட்டது.

'கொஞ்சமுமே பாசமில்லாமல் 'நை..நை' என்று குற்றஞ்சொல்லிக் கொண்டிருக்கும் இவரா, இப்படி அன்பு பொங்கத் துடிக்கிறார்?' என்று நம்பமுடியாமல் நின்றாள்.

புரிந்துகொள்வது என்பது வாழ்க்கையில் மிக இன்றியமையாதது. பல குடும்பங்களில் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாமல் இருப்பதாற்றான் அநாவசியமான கருத்துமோதலும் சண்டையும் வெறுப்பும் உருவாகிக் குழப்பத்தையும் பிரிவையும் விளைவித்து விடுகின்றது.

குரு கட்டிலின் அருகே நாற்காலியைப் போட்டு பக்கத்திலிருந்த மகனின் கரத்தை மெதுவாகத் தடவியபடி முறிந்த காலைப் பார்ப்பதும் முகத்தைப் பார்ப்பதுமாக இருந்தான்.

துர்க்கா அவன் பக்கத்தில் வருவது தெரிந்தது. தகப்பனின் கண்ணீரைத் தன் சட்டையால் துடைத்தபடி கண்கலங்க, அப்பா என்று கட்டிப்பிடித்தாள். குரு மகளைத் தன்னோடு சேர்த்து  அணைத்து, அவள்மீது எந்தக்கோபமும் தன் மனதுக்குள் இல்லை என்று விளங்கும் வகையில் அன்பாக தடவிக் கொடுத்தான்.

வீட்டில் பல மாதங்கள் கதை பேச்சுக்கு இடமில்லாமல் மௌனயுத்தம் நடந்து கொண்டிருந்தது.

பிள்ளைகள் எல்லை தாண்டிச் செல்லும்போது, இயலாத்தன்மை விசுவரூபம் எடுத்து, நரம்புகளைக் கட்டிப்போட்டு அவனைச் செயலற்றவன் ஆக்கியிருந்தது.

கதைத்து, புத்திசொல்லி, அன்பாக எடுத்துக்கூறி, எல்லாம் பார்த்தபிறகு இனியும் சரிவராது என்ற நிலையில்; அதுக்கு மேலை போனால் குடும்பமே பிரியும் என்ற பயத்தில் அவன் அடங்கியிருந்தான்.

பொறுமை... பொறுமை... என்று நவம் அவனுக்குக் கூறிய ஆறதலான அறிவுரையும் அவனுக்குக் கை கொடுத்தது.

'அப்பா! அண்ணைக்கு எல்லாம் ஓகே என்று டொக்டர் சொல்லியிருக்கிறார். இடையிலை அண்ணை மயக்கம் தெளிந்து விழித்து விட்டு நித்திரை கொள்கிறார், கவலைப்படாதேங்கோ அப்பா!'

அப்போ, நவம் மனைவி, பிள்ளைகளுடன் உருத்திராவைப் பார்க்க வந்தான். தொழிற்சாலையிலிருந்து குருவுக்கு தொலைபேசி வந்ததால், உருத்திராவின் விபத்து விடயம் அங்கு வேலையிலிருந்த நவத்துக்கும்; தெரியவந்தது. வேலையால் வீட்டுக்குப் போனதும் குடும்பத்துடன் வந்திருந்தான்.

சிறிதுநேரம் அங்கு நின்றுவிட்டு, எல்லோரும் அறைக்குள் நிற்பது இடையூறாக இருக்குமென்று வெளியே பார்வையாளருக்கு என ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்று  உட்கார்ந்து உரையாடினர்.

துர்க்காவும் தமிழினியும் ஒன்றாகப் படித்து வந்தவர்கள். இப்போ இரு வருடங்களாக அவள் இறங்கி வேறு பாடசாலையில் படிக்கிறாள். இதனால் பெரிய தொடர்புகள் இதுவரை இருக்க வில்லை. இன்று நீண்ட நாட்களின் பின் மீண்டும் கதைக்க இது ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்தது.

நவம் குடும்பமாக உருத்திராவைப் பார்க்க வந்தது குரு, நீலா இருவருக்கும் பெரும் மன ஆறதலைக் கொடுத்தது.

கவலை என்பது பகிர்ந்து கொள்ளப்படும்போது மனத்தின் சோர்வு தளர்ந்து ஆறதல் பிறக்கின்றது. உள்ளம் தெளிவடைகின்றது. மீண்டும் புதுச்சக்தி ஊற்றெடுத்துச் சமாளிக்கும் வலுவைக் கட்டியெழுப்ப வைக்கிறது. ஒருவரின் துன்பத்தில் பங்கு கொள்வதும் கூடி ஆறுதல் பகர்வதும் உதவி புரிவதும் சுகம் விசாரித்து மனதுக்கு தென்பையும் உற்சாகத்தையும் ஊட்டுவதும் உண்மையிலே எங்கள் தமிழ்மக்களுக்கே உரிய சிறப்பான நற்பண்பாகும்.



4. (2)  வாழ நினைத்தால் வாழலாம்


நவம் வீட்டுத்;தொலைபேசி குரல் கொடுத்தது.

சுகந்தி எடுத்து, 'ஹலோ!' என்றாள்.

மறுமுனையில், 'நான் நீதன்ரை அம்மா கதைக்கிறன்!'

'சொல்லுங்கோ, சுகமாக இருக்கிறீங்களா?' கண்டு பழக்கம் என்பதால் சம்பிரதாயத்துக்கு நலம் விசாரித்தாள் சுகந்தி.

'நாங்கள் சுகமாகத்தான் இருக்கிறம்! நீங்கள் உங்கடை மாப்பிள்ளையைக் கொஞ்சம் கட்டுப்படுத்த வேணும். பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கெல்லாம் பியர் வாங்கிக் கொடுத்துத் தன்னை மாதிரி ஆக்கப் பார்க்கிறார்.' 

'பொறுங்கோ!' சுகந்திக்குத் தலை சுற்றியது. சுனாமி அடிபோல, தொலைபேசியில் இப்படியொரு குரல் அவள் செவிகளில் இடித்தது.

'எனக்கு நீங்கள் சொன்னது விளங்கேல்லை!'

'தமிழிலைதானே சொன்னனான், இல்லாட்டி உங்களுக்குக் காது ஏதும் பிழையோ?'

'கொஞ்சம் அமைதியாகக் கதையுங்கோ, நாங்களும் மனிசர்தான்.'

'அது தெரியும்...!'

'நான் நவத்தின்ரை மிஸ்ஸிஸ் சுகந்தி.... நீங்கள் மாறி ரெலிபோன் எடுத்திட்டீங்கள் என்று நினைக்கிறன்!'

'நான் மாறி எடுக்கேல்லை, உங்களை மாதிரி விபரமில்லாத ஆக்கள் நாங்களில்லை.... நவத்தின்ரை தங்கச்சியாருக்கு மாப்பிள்ளை பேசி வைச்சிருக்கிறீங்களெல்லே.... பெயர் சதா... மெக்கானிக்.... அவரைப்பற்றித்தான் சொல்லுறன்!'

பூங்கோதையும் இந்த அதிரடி உரையாடலைக் கேட்டு மனம் கலங்கிப் போயிருந்தாள்.

'இப்ப அவருக்கு என்ன...?' கேட்டாள் சுகந்தி.

'எங்கடை பிள்ளை.... தொழிற்கல்வி படிக்கிறான், அவனைத் தன்னோடை கூட்டிக்கொண்டு திரிந்து படிப்பைக் குழப்பிறது மட்டுமில்லாமல்;, பொல்லாத குடிவகையெல்லாம் அவனின்ரை காசிலை வாங்கி, தானும் குடித்து, அவனையும் குடிக்க வைத்து சீ.... என்ன மனிசனப்பா.....!'

'நீங்கள் நேரிலை பார்த்தமாதிரிக் கதைக்கிறீங்கள்! உங்கடை மகன் பியரிலை குளிக்கிறது ஊருக்கே தெரியும், அதுக்கேன் அந்த மனிசனிலை போய்ப் பழி போடுறீங்கள்? றோட்டிலை உங்கடை மகனை நீங்கள் காணேல்லைப் போலைக் கிடக்கு! கிணற்றுத்தவளை மாதிரி இருந்துகொண்டு விபரமான ஆள் மாதிரி விளாசிறீங்கள்!'

பூங்கோதை சுகந்தியைப் பார்த்து, சண்டையைப் பெருப்பிக்க வேண்டாமென்று, கதையை முடிக்கச்சொல்லி சைகை மூலம் காட்டினாள்.

'அதுசரி, நீங்கள் எங்களைவிட விபரமானனீங்கள்தான்.... அது தான் உங்கடை கண் சுகமில்லாத மச்சாளையும் பிள்ளையையும் பாழ்ங்கிணற்றுக்குள் தள்ளுகிறமாதிரி, அந்தப் பொறுப்பில்லாத மனிசனிட்டைக் கட்டிக் கொடுக்கப் போறீங்கள்! உங்கடை பாரம் தீர்ந்திட்டுது... நீங்கள் சந்தோசமாக இருக்கலாம்... ஆர் எக்கேடு கெட்டாலும் உங்களுக்கென்ன...?'

இதற்கு மேல் தொலைபேசியில் உரையாடினால் சுகந்திக்கு மண்டை வெடித்து விடும் போலிருந்தது. இணைப்பைத் துண்டித்துக் கொண்டாள். பக்கத்தில் கேட்டுக்கொண்டிருந்த பூங்கோதையைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

'அவளின்ரை திமிர் பிடித்த கதையைக் கேட்டு, நீ ஏன் அழுகிறாய்? அழாதை...! விழுந்தவனை மாடேறி விழக்கற காலமிது..... கவலைப்படாதே! சதாவிடம் என்ன நடந்தது? ஏன் இப்படியெல்லாம் கதைக்கினம் என்று கேட்பம்...!'

'அவரிட்டைக் கேட்டால் கவலைப்படுவாரெல்லே!' என்று பூங்கோதை நசுக்காக மறுப்புத் தெரிவித்தாள்.

நவம் வீட்டுக்கு வந்ததும் நீதனின் தாய் லாலா கூறிய குற்றச்சாட்டுகளை அவனுக்குத் தெரிவித்தனர். அவன் கேட்டுக் கவலைப்பட்டான். எடுத்ததுக்கும் கோபித்து, சண்டை, விசாரணை என்று போகிறவனல்ல என்பதால் மனைவியும் தங்கையும் நடந்ததை விபரமாகக் கூறி, கலந்தாலோசித்தனர்.

'சதாவிற் பிழை இருக்கலாம், இல்லாமலிருக்கலாம். ஆனால், அவ எங்களுக்கு ரெலிபோன் எடுத்து வாய்க்கு வந்தபடி கதைத்தது பிழை.... என்ன செய்யிறது? இப்படியும் மனிசர் இருக்கினம்! வீட்டிலை என்ன நடக்குதென்றே தெரியாதவர்கள், இவர்களின் கதைக்கெல்லாம் காது கொடுத்தால் நாங்கள் ஒன்றுமே செய்ய முடியாது!

இன்னொரு விடயம்... பரதன் வேலையில் சொன்னவன்.... நான் சதாவுக்குத் தங்கச்சியைக் கல்யாணம் செய்து கொடுக்கிறது சிலருக்குப் பிடிக்கவில்லை... பலமாதிரியும் கதைக்கிறார்கள்.. பொறுப்பில்லாதவனுடைய கையில் பூங்கோதையைக் கொடுக்கிறது பாழ்ங்கிணற்றுக்குட் தள்ளி விடுகிறது மாதிரி என்றெல்லாம் கதைக்கினமாம்... அதுதான் வடிவா யோசிச்சுச் செய்யச் சொன்னான்...! பிறகு ஏதுமொன்று நடந்து, ஊர் சிரிக்கிற மாதிரி வரக்கூடாது. ஏனென்றால் முதல் ஒருக்கா நீங்கள்  இப்படியொரு சிக்கலைச் சந்தித்திருக்கிறீங்கள் என்று அவன் ஆலோசனை சொல்லியிருக்கிறான்.

பூங்கோதை! உன்ரை விருப்பம்தான் எங்கடை விருப்பம்.... யூகென்ட்அம்ரிலிருந்து வருகினம், வெருட்டுகினம்... பிள்ளை யையும் உன்னையும் பிரிச்சுப்போடுவினம் என்று பயந்துதான் இந்தக் கலியாணத்தக்குச் சம்மதிச்சிருந்தால் சொல்லு! அவர்கள் வந்து பிள்ளையைக் கொண்டு போவதென்றால் அதுக்குக் காரணம் இருக்கவேணும்... எங்களை மீறி ஒன்றும் நடக்கப் போறதில்லை.... நீ தேவையில்லாமற் பயப்படாதை!

அதோடை சதா நல்லபிள்ளை..., ஆனால் திருந்துவார் என்று நிச்சயம்பண்ண மாட்டன்! நல்லா ஊறிவிட்டார். இந்தப் பழக்கத்தை அறவே விடுவாரென்றதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் அவர் ஒரு இலட்சியவாதி... என்ன மயக்கத்திலை இருந்தாலும் சொன்ன சொற் தவறமாட்டார். யாருக்குத் தெரியும் வளர்த்தாற் குடுமி, வழிச்சால் மொட்டை என்ற மாதிரி... ஏதாவது மாற்றம் இருக்கோ என்னவோ! நீ வடிவாக யோசி... உன்ரை விருப்பம்தான் எங்கடை விருப்பம்!'

நவம் மனதுக்குள்ளிருந்த அத்தனையையும் மனைவிக்கும் தங்கைக்கும் சொல்லிவிட்டான்.

பூங்கோதை சொன்னாள்,
'எனக்கு அவரைப் பிடிச்சிருக்கு! நல்லாவே பிடிச்சிருக்கு! வெளித்தோற்றத்தை என்னாற் பார்க்க முடியவில்லை. ஆனால் அவர் மனதைப் பார்க்க முடிகிறது. எனக்கு ஒரு நல்ல கணவராக இருப்பாரென்று என்மனம் அடித்துச் சொல்கிறது!'

'ஓகே...! இனி எந்த மாற்றமுமில்லை, வைத்த திகதியில் கல்யாணம் நடக்கும்.' உறுதியுடன் கூறினான் நவம்.

4. (3)  வாழ நினைத்தால் வாழலாம்

ஒருநாள் துவாரகா நவம் வீட்டுக்குத் தமிழினியைச் சந்திக்க வந்தாள்.

எதிர்பாராத வகையில் அங்கு சதாவும் வந்திருந்தான். சுற்றி இருந்து எல்லோரும் மகிழ்வோடு தேநீர், சிற்றுண்டி சுவைத்த வாறு உரையாடிக்கொண்டிருந்தார்கள். துவாரகாவுக்கு நல்ல வரவேற்புக் கொடுத்து, அவளையும் தங்களுடன் அமர்த்தி உபசரித்தார்கள்.

துவாரகா, தமிழினியைப் போல ஒரு நண்பியை இதுவரை சந்திக்கவில்லை. அத்தோடு தமிழ் நண்பிகளும் அவளுக்கு இல்லை. அவளின் நண்பர்களோ படிக்க வேண்டும் முன்னேற வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் சிறிதேனும் இல்லாதவர்கள். பொழுதை இனிதாகக் கழிப்பதே வாழ்க்கை என்ற எண்ணம் கொண்டவர்கள்.

இன்று துவாரகா புது அனுபவங்களைச் சந்தித்தாள். இப்படி ஒருநாளும் தங்கள் வீட்டில் அமைதியும் சந்தோசமும் இருந்ததில்லை என்பதைத் துவாரகா எண்ணிப் பார்த்தாள்.

பூங்கோதையைச் சதா திருமணம் செய்ய இருப்பதுபற்றி அவளுக்கு அறிமுகம் செய்திருந்தார்கள்.

பார்வையில்லாவிட்டால் எவ்வளவு கஸ்டம் என்பதைப் பூங்கோதையைப் பார்க்கும்போதுதான் துவாரகாவால் விளங்கிக் கொள்ளமுடிந்தது.

சதாமாமா பல்வேறு பிரச்சனைகளுடனும் இருப்பவரென்றாலும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் பூங்கோதை அன்ரியை மனைவி யாக்க முன் வந்திருக்கிறார்.

'மனமிருந்தால் இடமுண்டு' வாழ்க்கையில் பிரச்சனைகள் உண்டு, அவற்றிலிருந்து ஒருவரும் தப்பிவிட முடியாது, பிரச்சனைகளைச் சந்திக்கின்ற மனோபலமும் சமாளிக்கின்ற வல்லமையும் இருந்தாற்றான் வாழ்க்கையை நிம்மதியாக வாழமுடியும். இதற்குக் கல்வியறிவு, அதுவும் இளம் வயதிற் கற்கும் கல்வி மிகவும் இன்றியமையாதது என்பது துவாரகாவுக்குப் புரியத் தொடங்கியது.

கடல் கடக்க வேண்டுமென்றால் நீந்தக் கற்றுக் கொள்ள வேண்டும் அல்லது படகிலேறிப் பயணத்தைத் தொடர வேண்டும். சூறாவளி அடிக்கலாம், சுனாமி வெடிக்கலாம், கடல் குமுறிக் கொந்தளிக்கலாம். எதையும் சந்திக்கும் துணிவும் திறமையும் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் நினைத்ததைச் சாதிக்க முடியாது.

தமிழினி, துவாரகாவைத் தன் அறைக்குக் கூட்டிச்சொன்றாள். அழகாகவும் சுத்தமாகவும் அதது அந்தந்த இடத்தில் ஒழுங்காக இருக்கும் அமைப்பும் அவள் கண்களிற்பட, ஏணி வைத்தாலும் அவளை எட்டமுடியாது என்று துவாரகா கூனிக்குறுகி நின்றாள்.

'என்னால் ஏன் இவள்மாதிரி இருக்கமுடியாது?' என்ற ஒரு கேள்வி அடிமனதில் அரும்புவிட்டு, நெஞ்சில் இடித்தது. அவளின் அமைதியையும் உற்சாகமின்மையையும் கண்ட தமிழினி,
'என்ன மௌனமாகிவிட்டாய்? அலுப்புத்தட்டினால் வெளியே போவம்!' என்றாள்.

'இல்லை, இல்லை.... வித்தியாசமாக இருக்கு!' என்று மூச்சை இழுத்து வெளியே விட்டாள்.

'வித்தியாசமாக இருக்கோ! விளங்கேல்லை, நீ என்ன சொல்லுறாய்?' தமிழினி குழப்பத்துடன் கேட்டாள்.

'இங்கை எல்லாமே நல்லாயிருக்கு, இப்படியொரு ஒழுங்கு எங்கடை வீட்டிலே இல்லவேயில்லை, அப்பா ஒருமாதிரி... அம்மா வேறொரு மாதிரி... அண்ணா, அவரோடை பேசவே முடியாது.... தம்பி, அவன் ஒரே குழப்படி.... வீட்டிலே எல்லாம் தாறுமாறாகப் போட்டது போட்ட இடத்திலேயே இருக்கும். எப்பவும் யுத்தகாலம் போலப் பதற்றமான சூழ்நிலையாகத்தான் இருக்கும். வீட்டை விட்டு எப்போ வெளியே போவேன்? என்றிருக்கும், அமைதியேயில்லை.' துவாரகா உள்ளதை அப்படியே தமிழினிக்கு விளக்கிக் கூறினாள். அவள் மனதின் துன்பம் வார்த்தைகளிற் கலந்து ஒலித்தது.

'எனக்கும் உன்னை மாதிரிப் படிக்க வேண்டும், ஒழுங்காக இருக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கு.....!' சோகம் தொண்டையைக்  கௌவ, துவாரகா பெருமூச்சுடன் கூறினாள்.

'அதையேன் இவ்வளவு கவலையோடு சொல்லுறாய்? சந்தோசமாக, உசாராகச் சொல்லன்!'

'துவாரகா! நாங்கள் பயன்படுத்தாமல் வீணடிக்கின்ற ஒவ்வொரு நிமிடமும் வாழாமற் சாகடிக்கும் நிமிடங்கள் என்று அப்பா அடிக்கடி சொல்லுவார். ஒரு நிமிடத்திலே ஒரு விமானம் எவ்வளவு தூரத்தைக் கடந்து பறக்கிறது! ஒரு றொக்கற் விண்வெளியிலே எத்தனை கிலோ மீற்றர் தூரத்தைத் தாண்டி, விரைந்து செல்கிறது!

நினைத்துப் பார்! நாங்கள் சிலவேளை மணித்தியாலக்கணக்காக ஒன்றுமே செய்யாமல் இருப்போம், அலுப்படிக்குதென்று சினப்போம்! கூடாத பழக்கங்களுக்கு மனதிலே இடம்கொடுத்து, வாழ்க்கையைத் திசை மாற்றி விடுவோம். அதுதான் துவாரகா! ஒரு திட்டம் மனதுக்குள் தயார் செய்ய வேண்டும். தினமும் எங்களுக்கு ஒரு ஒழுங்கான வேலைத்திட்டம் இருந்தால், நாங்கள் படிப்படியாக முன்னேறிக்கொண்டு போகலாம்.


சிந்திக்க வேண்டும்.... சிந்தித்ததைச் செயற்படுத்த வேண்டும், சிந்திக்காதவனும் செயற்படாதவனும் தேங்கி நின்று நாற்றம் எடுக்கும் சேற்றுத்தண்ணீர் என்று அப்பா அடிக்கடி தன் நண்பர்களுக்குச் சொல்லுவார்.

துவாரகாவின் முகத்தில் ஒரு மலர்ச்சி விரிந்தது. தமிழினி அவள் கண்களுக்கு ஒரு உதாரணமாக நின்றாள். இவள் போல வரவேண்டுமென்று அவள் மனதுக்குள் ஆசை அத்திவாரம் போட்டது.

'உனக்கு என்ன உதவி வேண்டுமென்றாலும் கேள்! சேர்ந்து படிக்க விருப்பமென்றால் வா, படிக்கலாம்!' தமிழினி மிகுந்த ஆதரவோடு அழைப்பு விடுத்தாள்.

Keine Kommentare: