2. (1). வாழ நினைத்தால் வாழலாம்.
சதா எழுந்திருக்கத் தாமதமானதால் வேலைக்கு நேரத்துக்குப் போக முடியவில்லை. இரண்டு மணிநேரம் பிந்தியே தொழிற்சாலைக்குச் சென்றான். இரவு மது அருந்தியதால் ஏற்பட்ட சோர்வும் தலையிடியும் இன்னும் அவனை விட்டகலவில்லை. இப்படியான சந்தர்ப்பங்களில் மருத்துவலீவு கொடுத்து வீட்டிலேயே படுத்திருப்பான். ஏனோ இன்று திருமண விடயம் கை கூடியிருப்பதால் பொறுப்புணர்வு நெஞ்சில் தலைதூக்க, வீட்டில் நிற்க மனம் இடந்தரவில்லை.
தொழிற்சாலை நிர்வாகிகளின் கெடுபிடி அதிகரித்து, வேலைகளில் இறுக்கமும் கட்டுப்பாடும் பன்மடங்காகக் கூடியிருக்கும் இக்காலகட்டத்தில் சதா போன்று வேலைக்கு ஒழுங்கின்றி இருப்பவர்களை நிற்பாட்டி விடுவது சாதாரண ஒரு விடயம் என்ற போதும் அவன் வேலைத்திறமை கருதி மேலதிகாரிகள் அவனைப் பலமுறை மன்னித்திருந்தார்கள். ஆனால் இன்று அவன் கஸ்டகாலம் வேலையிலிருந்து அவனை நிற்பாட்டி விட்டார்கள். ஏற்கனவே பல கண்டிப்புக்கடிதங்கள் அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்ததால் மன்னிப்புக்கு இடமில்லாமற் போய்விட்டது. அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் சதா மன்னிக்கும்படி கூறி, இனி இப்படித் தவறு நிகழாது என்று கதைத்துப் பார்த்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
சதாவுக்கு வேலையில்லை.
கல்யாணம் நிச்சயமானதுமே வேலை போய்விட்டது.
'இந்தப் பொம்பிளை பொருத்தமில்லை, வேறு பார்!' என்று சிலர் அவனுக்குப் புத்தி கூற முற்பட்டனர்.
இது போதாதென்று சதாவின் தந்தை வேறு கிணற்றடியில் தடக்கி விழுந்து கால் முறிந்து போய்விட்டதென்ற செய்தி ஊரிலிருந்து வந்திருந்தது.
'இது நன்மைக்கில்லை சதா! கல்யாணம் என்றது ஆயிரங் காலத்துப்பயிர்... தடுக்கிறேன் என்று நினைக்காதை! யோசி..!
'ஆம்' என்றது ஈரெழுத்து, 'இல்லை' என்றது மூன்றெழுத்து,
'வேண்டாம்' என்றது நாலெழுத்து.... அதிர்ஸ்டம் இல்லாதவள் போலக் கிடக்கு, வேண்டாம் என்று சொல்லு!' என்று தூரத்து அக்கா உறவான ஒருத்தி அவனுக்குத் தொலைபேசியில் புத்திமதி கூறினாள்.
சதா என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான்.
வீட்டுக்காரன் வீட்டை விற்றுவிட்டான். வாங்கினவன் வீட்டை விட்டு எழும்பச் சொல்லி அறிவித்தல் கொடுத்தான். மூன்றுமாத அவகாசம் வீடும் மாற வேண்டும்.
சிகரெட்புகை வீட்டுக்குள் நிறைந்ததேதவிர, என்ன செய்யலாம் என்று ஒரு வழி தோன்றவில்லை. தொலைபேசிமணி பல தடவைகள் ஒலித்து ஓய்ந்தது, எடுத்துக் கதைக்க முடியாதளவுக்கு அவன் மனம் குழம்பிப்போயிருந்தது.
தொலைபேசிமணி விடுவதாக இல்லை... திரும்பத் திரும்ப அடித்தது. நவம் வீட்டிலிருந்து அடிக்கிறது என்பது அவனுக்குத் தெரியும். என்ன பதில் சொல்வதென்று அவனுக்குத் தெரியாமலிருந்தது. இறுதியில் அவனையும் மீறி, அவன் கை தொலைபேசியைத் தூக்கியது. மறுமுனையில் பூங்கோதை.....
'பலரும் பல மாதிரிக் கதைக்கினம்.... கலியாணம் குழம்பிப் போச்சாம் என்றுகூடக் காதில் விழுகிறது. என்ன நடந்தது...?' என்று கலங்கிய குரலிற் கேட்டாள் பூங்கோதை.
'ஒன்றுமில்லை!' என்றான் அவன்.
'அண்ணை எத்தனை தடவை உங்களுக்கு ரெலிபோன் எடுத்தவர். நீங்கள் வீட்டிலை இல்லை... அவரும் அண்ணியும் சரியாக் கவலைப்படுகினம். ஏன் இங்கை வாறேல்லை? நாங்கள் ஏதும் பிழையா நடந்தால் சொல்லுங்கோ! நீங்கள் ஒரு நல்ல மனிசன் என்று என் மனம் சொல்லுது!' அவள் குரலில் அழுகை கலந்திருந்தது.
'அதொண்டுமில்லை.... வேலையில்லை, காரில்லை... வீடு கூட இல்லாமற் போகப் போகுது.....!'
'ஆம்பிளை உங்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையே? துணிவு மட்டும் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு நாட்டிலை சாதனை படைக்கும் ஆயிரமாயிரம் வீரர்களை நினைச்சுப் பாருங்கோ! அவர்களின் நம்பிக்கையை எண்ணிப் பாருங்கோ! எத்தனை பிரச்சனைகள்..... எத்தனை குழப்பங்கள்! இத்தனையிலும் நம்பிக்கையையும் துணிவையும் மூலதனமாகக் கொண்டு எந்தச் சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக நிமிர்ந்து நிற்கிறார்கள். அவர்களை நினைச்சுப் பாருங்கோ!'
'நான் பிறகு கதைக்கிறன்.' என்ற சுருக்கமான வாக்கியத்துடன் அவள் பதிலையும் எதிர்பார்க்காமல் தொலைபேசியை வைத்து விட்டான்.
பூங்கோதைக்கு முகம் வாடிவிட்டது. 'என்ன இவர், நான் இவ்வளவு சொல்லியும் ஒரு பதிலும் சொல்லாமல் குறுக்காலை வெட்டுவது போலை தொலைபேசியை வைச்சிட்டாரே!' அவள் நொந்து போன நெஞ்சம் வெந்து துடித்தது.
கண்களை மூடி, கண்ணனை நினைத்தாள்.
ஊரிலே நான் இல்லை
தேரேறி நீ போகின்றாய்;
ஊரே பார்க்கிறது
நான் பார்க்கவில்லையே!
அவள் அழவில்லை.... கண்களிலே அருவி கொப்பளித்துப் பாய்ந்தது.
'ஏன் எனக்கு இந்த ஏமாற்றம்...? கண்ணோடு இருந்தவளைக் கபோதியாக்கி.... கல்யாணமாகியும் வாழாவெட்டியாக்கி.. ஏன்? ஏன்? ஏன் இந்த ஏமாற்றம்.....?
அழகிய கண்களைக் குருடாக்கி, வாழ்க்கையை இருட்டாக்கி... நீ என்ன வேடிக்கை பார்க்கிறாயா? பார்!
சங்கீத ஞானத்தைத் தந்தவனே.... அது தாய்தமிழுக்காக ஒலிக்கும் குரல்களில் ஒன்றாய் ஒலிக்குமா? அடக்குமுறைகளை ஒழிக்கும் அம்புகளாய்; என்பாடல்கள் பிறக்குமா?என் மகன் சுரேன் வளர்ந்து படித்துப் புகழ் படைப்பானா? எப்படி...? பறித்த கண்ணைத் திருப்பித்தா! செய்து காட்டுகிறேன்.
பிள்ளையை நான் கவனமாக வளர்க்கமாட்டேன் என்று இந்த நாட்;டு அதிகாரிகள் நினைக்கிறார்கள். தங்கள் பராமரிப்பில் பிள்ளை வளர்ந்தால் நல்லதென்று அபிப்பிராயம் கூறுகிறார்கள்.'
இது அவளுக்குப் பெருந்தலையிடியாக இருந்தது. பிள்ளையைப்
பிரிந்து அவளால் ஒரு கணமும் இருக்க முடியாது. அதை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. என்ன செய்வது..? இதிலிருந்து தப்புவதற்கு கண் வேண்டும்.... அல்லது கணவன் வேண்டும்... இரணடுமே அவளுக்குக் கிடையாது என்ற நிலையில் அவள் மனம் சோர்ந்து நடுங்கியது.
நம்பிக்கை மலையளவு இருந்தும் பாதை மூடிவிட்டால் போகுமிடம் சேரமுடியுமா?
ஆடும் மயிலைக் கட்டிப் போட்டது போல் அவள் வாடிப்போய் நின்றாள்.
மறுமுனையில்.... சதா தொலைபேசி உரையாடலைத் தானே இடையில் துண்டித்ததை நினைத்துக் கவலைப்பட்டான்.
'வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல, பூங்கோதை வருந்துவாளே, துக்கமும் சோகமும் அவளைத் துடிதுடிக்க வைக்குமே!' என்று கவலைப்பட்டான்.
என்ன செய்ய....? பலரும் பலமாதிரிக் கதைக்கிறார்கள்.
2. (2). வாழ நினைத்தால் வாழலாம்
வேறு மாப்பிள்ளை இல்லாததாலை...... வேறு வழி இல்லாததாலை குடியே தஞ்சம் என்று கிடக்கிறவனுக்குப் பூங்கோதையைத் திருமணம் செய்து வைக்கினம்.... கிளியை வளர்த்துப் பூனையிடம் கொடுப்பது போல....
கன்றையும் மாட்டையும் கட்டிக்கொண்டு, வேலை வெட்டி இல்லாமல் இவன் என்ன செய்யப் போகிறான்?
நவத்துக்குப் பூங்கோதையும் மகனும் சுமையாக இருக்கிறது போதாதென்று இவனும் சுமையாகப் போகிறான்....!
இப்படிப் பல வாய்வழிக் குற்றச்சாட்டுகள் வம்பளப்பவர்கள் வாயிலிருந்து அவன் செவிகளுக்குப் பாய்ந்து, அவனைச் செயல் இழக்கச் செய்தன.
'முன்வைத்த காலைப் பின் வைக்கக்கூடாது.' இது அவனுக்குத் தெரியும்.... என்றாலும் தன்னால் மற்றவர்கள் பாதிக்கப் படுவார்கள்.... வேறுவழியின்றித்தான் மாப்பிள்ளையாக எடுத்திருக்கிறார்கள்.... போன்ற மனதைக் குத்தும் கதைகள் அவனைச் சற்றுக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டன. அவன் செய்வதறியாது பியர்ப்போத்தலைத் திறந்து குடித்துக்கொண்டு, சிகரெட்டையும் பற்ற வைத்து ஊதினான்.
'நீங்கள் ஒரு நல்ல மனிசன் என்று என் மனம் சொல்லுகிறது' என்ற பூங்கோதையின் குரல், அவன் மனதில் ஓயாது ஒலித்துக் கொண்டேயிருந்தது.
பியர் மிடறு மிடறாகத்தான் அவன் தொண்டையை நனைத்தது.
'சாகலாம்' ஒற்றைச் சொல் அவன் வாயில் மெதுவாக வெளி வந்தது.
பூங்கோதையை நான் கல்யாணம் செய்ய வேணும்... அவளை வாழ வைக்க வேணும்... அவள் கனவுகளை நினைவாக்க வேணும்... இல்லாட்டி நான் சாகலாம்.... சாகலாம்... செத்துத் தொலையலாம்.... இருந்து என்னத்தைச் செய்தேன்? என்னத்தை வெட்டிக் கிழித்தேன்....? யாருக்கு என்னாலை பிரயோசனம்...? ஏன்டா நான் வாழ்வான்..? இந்த பியரைக் குடிக்கவா? இல்லாட்டி இந்தச் சிகறெட்டை ஊதவா? சாப்பிட்டுச் சாப்பிட்டு மண்ணுக்குப் பாரமாய்.... மற்றவர் பல்லுக்குப் பதமாய்.... பாரமாய்.. சிரிப்புக்கு இடமாய்.... சீ... சீ... வெக்கங்கெட்ட வாழ்க்கை.... இதுக்கு ஒரு முழுக்குப் போட்டுத்தானாக வேண்டும்.
அவன் கண்களில் ஒரு உணர்வு துளிர்த்து வளர்ந்தது.
'செய்! அல்லது செத்துமடி!' என்ற வாசகம் ஈழமண்ணில் ஓயாது அடிக்கும் செல் போல் அவன் நெஞ்சில் ஒலிக்கத் தொடங்கியது.
பியர்ப்போத்தலை குறையிலும் சிகறெட்டை இடையிலும் நிறுத்தி விட்டு, தன் பழைய மிதியுந்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.
நான்கு சுவருக்குள் இருந்து குழம்புவதைவிட, வெளியில் வந்து இயற்கையை, மற்றைய மனிதர்களின் ஓட்டாட்டங்களை, மிருகங்களின் துள்ளல்களை, பறவைகளின் பாடல் இசைகளை... காணும்போது மனது தெளிவடையும்;, புதிய உணர்வுகள் பிறந்து உள்ளத்தின் சோர்வுகள் அகன்று உற்சாகம் பிறக்கும்; என்பதை சிறிது தூரம் வீதியிலே செல்லும்போது, சதாவால் உணர முடிந்தது.
'நான் மாறவேண்டும்!'
சதாவுக்குள் இன்னொரு சதா இருக்கிறான். அவன் தூங்கிக் கொண்டிருக்கிறான், தூங்கிக் கொண்டிருப்பவன் தூக்கம் கலைவது போல..... அவன் எழ முனைவது போல ஒரு பிரமை.
மிதியுந்து பாதையில் போய்க் கொண்டிருக்கிறது.... எங்கு போவது என்ற நோக்கின்றி எங்கோ அந்தப் பட்டணத்து வீதியிலே வேகமின்றி, ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டு போவது போலப் போய்க் கொண்டிருந்தது. அவ்வழியே போக முடியாமல் வீதியில் பெரியபாலம் ஒன்று கட்டும் வேலை நடந்து கொண்;டிருந்தது. மிதியுந்திலிருந்து இறங்கி, உருட்டி மறுபாதையில் அதில் ஏறி, திரும்பி நின்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாலக்கட்டு வேலைகளை ஒரு நிமிடம் பார்த்தான்.
இயற்கையாக ஓடும் தண்ணீர்வாய்க்கால் கணிசமான அகலம் கொண்டது. அதைத்தடை செய்யாமல், மேலால் வீதி அமைத்துக் கட்டும் பாலம் அது. இயந்திரங்களின் வியக்கத்தக்க இயக்கங்களும்; மனிதர்களின் நுணுக்கம் மிக்கதும் அறிவு செறிந்ததுமான வேலைப்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டு இருந்தன.
'இப்படியான நவீனசெயற்திட்டங்களை ஏன் எங்கள் தாயகத்தில் நடைமுறைப்படுத்த முடியாது? நாடும் முன்னேறி, வேலையில்லாத் திண்டாட்டமும் ஒழியுமே! இந்நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத் திட்டங்களைப் பயன்படுத்தினால் நம் நாட்டை வெகு விரைவில் முன்னேற்றிவிடலாமே!' என்று அவன் நினைத்தான்.
மறுகணம், சீமெந்து, இரும்பு போன்றவற்றுக்கு எங்கே போவது? கட்டுப்பாடும் தடையும் விதிக்கப்பட்டிருக்கிறதே, என்று கவலைப்பட்டான். அவன் மனதில் இதுவரையில்லாத ஒரு மாற்றம் தலைதூக்கியது.
எங்கிருந்து வந்தது இந்த மாற்றம்...? அவனுக்கே திகைப்பாக இருந்தது. குடியே வாழ்க்கை என்று வேறு எதையுமே மனதிற்; போட்டு அலட்டிக் கொள்ளாமற் குதூகலமாகத் திரிந்தவன், திடீரென்று ஒரு நாளில் ஒரு சில மணிநேரங்களில் மது என்ற இரும்புத்திரையை உடைத்துக்கொண்டு வெளியே வந்து, வெளியுலகில் மனதைச் செலுத்துகிறான் என்றால்.... அதற்கு... தொலைபேசியில் உரையாடிய அந்தச் சில வார்த்தைகள்... பூங்கோதை கூறிய அந்தச் சில சொற்கள்....! அவைதான் காரணமா?
'நம்பிக்கையையும் துணிவையும் மட்டும் மூலதனமாகக்கொண்டு எந்தச் சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்களே தாயகத்தில் எம்வீரர்கள்....!'
குடியில் மூழ்கி, அதனாற் பாதிக்கப்பட்டவர்களைக் கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வந்து திருத்த வைத்தியர்கள் எண்ணற்ற முயற்சிகள் எடுக்கும்போது, பூங்கோதையின் ஒருசில வார்த்தைகளுக்கு எத்தனை பெரும்சக்தி அடங்கியிருக்கிறது என்பதைச் சதா எண்ணிப் பார்த்தான். அவனுக்குட் பல திருப்பங்கள் உருவாகத் தொடங்கின.
சதாவின் மிதியுந்து, தொடருந்துநிலையத்தைக் கடந்த போது, அதன் பின்பகுதியில் இளைஞர்கள் சிலர் தீயபழக்கங்களுக்கு அடிமையாகி, அதுவே தஞ்சமென்று இருப்பதும் நிற்பதும் படுப்பதுமாய் பல கோணங்களிற் காணப்பட்டனர். படித்து முன்னேறும் இந்த வாலிபப்பருவத்தில், ஆண்களும் பெண்களும் இப்படிச் சீர்கெட்டுத் திசைமாறி, வாழ்வை இருட்டாக்கி, தங்களைத் தாங்களே அழிக்கும் நிலையைக் காண, சதாவுக்குப் பெருங் கவலையாக இருந்தது.
அவனே பொறுப்பற்றுத் திரிந்து, கெட்டுக் குட்டிச்சுவராகி நிற்கிறான். ஜேர்மனிக்கு வந்து இருபது வருடங்களாகிவிட்டன. அவனிடம் என்ன இருக்கிறது...? அவனுடன் வந்தவர்கள் கார், வீடு, குடும்பம், பிள்ளைகளின் படிப்பு என்று எவ்வளவு முன்னேற்றம்....! இத்தனைக்கும் அவனிடம் இந்தக் கியாமியா மிதியுந்தைவிட எதுவுமேயில்லை.
இருந்த வேலைகூட டாட்டா காட்டிவிட்டுப் போய்விட்டது. இவனுக்கு யாரோ இளைஞர்கள் குடித்துக் கொண்டாடுவது கவலையாக இருக்கிறதென்றால், இதற்கும் பூங்கோதையின் அந்தச் சில வார்த்தைகள்தான் காரணமாகும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen