Donnerstag, 31. Mai 2012

பகுதி 1


1. (1). வாழ நினைத்தால் வாழலாம்

புயல் வீசியடித்தபோது பூங்கொடி தவித்துத் துடித்தது போல பூங்கோதையின் மனம் கலங்கித் துடித்தது.
'இப்பிடியும் ஒரு மனிசன் இந்த உலகத்தில் இருக்கிறானா?' நம்ப வைத்து ஏமாற்றிய சுயநலக்காரக்கயவனை நினைத்து அவள் உள்ளம் கொதித்துக் குமுறியது.

எப்பிடியெல்லாம் நடித்தான்? கதை பேசி...... சிரித்து.... என் இருள் அகற்றும் விளக்கு தான் என்று வாயோயாமற் சொன்னானே....!

'பூங்கோதை!'

சுகந்தியின் குரல் கேட்டு, கலங்கிய கண்களை அவசரமாகத் துடைத்துவிட்டு,

'அண்ணி!' என்றாள்.

'கோவிக்காதை! உனக்குப் பிடிக்காது என்று தெரியும், ஆனால் உன்ரை அண்ணை உன்மீது கொண்ட இரக்கத்தாலைதான் இப்பிடிச் செய்யிறார், மாட்டன் என்றால் சொல்லு! ஆனால் நீ சந்தோசமாக இருக்கவேணும். உன்னிலை நாங்கள் உயிரையே வைச்சிருக்கிறம்.' என்று சுகந்தி தயங்கியவாறு சொல்லிக் கொண்டிருக்கையில்,
'பொம்பிளை பார்க்க வருகினமோ?' கேட்டாள் பூங்கோதை.
தலையாட்டல் மூலம் 'ஆம்' என்று பதில் கொடுத்த சுகந்தி, பூங்கோதையின் முகத்தைக் கவனித்தாள். கடந்த தடவைகள் போல் இம்முறை அவள் முகம் எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டாது மௌனமாக இருந்தது.

'வரச்சொல்லுங்கோ!' என்றாள்.
'எங்களிலை உனக்குக் கோபமில்லையே?' என்று கேட்டபடி அவளை அன்போடு அணைத்து, பாசத்தோடு தடவினாள் சுகந்தி. அவள்  கண்களிலும் இரக்கத்தால் கண்ணீர் பனித்தது

'வா! வெளிக்கிடுத்தி விடுகிறேன்!'

'இப்ப வருகினமோ?'

'அரைமணித்தியாலத்திலை வருகினமாம்.'

சேலை கட்டி, பூங்கோதை தன்னைத் தயார்படுத்திக் கொண்டாள். சுகந்தி அவளுக்குத் தலைசீவி, முகஒப்பனையைச் செய்து அழகுபடுத்தினாள்.

கதவு திறக்கப்படும் சத்தங்கேட்டது. நவம் முதலில் வந்தான், அவன் பின்னால் பெண் பார்க்க வந்தவர்களுடன் சதா வந்தான்.
'வாங்கோ!' என்று முகம்மலர வரவேற்றாள் சுகந்தி.
வந்தவர்கள் வரவேற்பறையில் இருந்த ஆசனங்களில் அமர, அவர்களுடன் நவமும் மனைவியும் உட்கார்ந்து உரையாடினர்.

தாடி, மீசையுடனும் ஒழுங்காக வெட்டிச் செப்பம் செய்யப்படாத தலை முடியுடனும் காட்சியளித்த சதா, மாப்பிள்ளை என்று அறிந்ததும் நவமும் சுகந்தியும் 'சப்;' என்று சோர்ந்து போயினர்.

'சம்பிரதாயத்துக்கு இவர்களை அழைத்து வந்தாலும் என்னைப்பற்றி நானே சொல்லத்தான் விரும்புகிறன்.'

'என்னைப் பார்க்க அருவருப்பாக இருக்குமென நினைக்கிறன். அதைவிட நான் சொல்வதைக் கேட்டால் இன்னும் உங்களுக்கு வெறுப்பாக இருக்கும்' என்றான் சதா.

அப்போ பூங்கோதையை அழைத்து வர, சுகந்தி எழுந்தாள்.

'அக்கா இருங்கோ! நான் சொல்லுறதைக் கேட்டிட்டுப் போங்கோ!'

அவன் என்ன சொல்லப் போகிறான் என்று கேட்க மீண்டும் இருக்கையில் உட்கார்ந்தாள் சுகந்தி.

'நீங்கள் சொல்லுறதைப் பூங்கோதையும் கேட்டால் நல்லதெண்டு நினைச்சன்.'

'! அப்பிடியே... அப்ப கூப்பிடுங்கோ!'

சுகந்தி உள்ளே போய் மைத்துனியைக் கூட்டி வந்தாள்.

பூங்கோதை வந்து ஒரு ஓரமாக நின்றாள்.

அண்ணன் அவளை இருக்கும்படி வற்புறுத்த, அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

'இவன் நெடுகக்கூடி பூங்கோதை போல ஒரு பொம்பிளையைத்தான் கல்யாணம் செய்யவேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறான்.' என்;று சதாவுடன் கூட வந்த அவன் நண்பன் வடிவேல் கூறினான்.

'ஏன் இப்பிடி ஒரு பிடிவாதம்?' கேட்டான் நவம்.

'ஒரு இலட்சியம்தான்!' சதாவிடமிருந்து பதில் வந்தது.

'கோவிக்காதேங்கோ, உங்களைப் பார்க்க அப்பிடி ஒரு இலட்சியவாதி போலைத் தெரியேல்லையே!'
சதா பதில் சொல்லவில்லை, மெல்லிய சிரிப்புடன் நிறுத்திக் கொண்டவன், 'நான் ஒரு தினக்குடிகாரன்' என்று கூறினான்.

'குடிக்கிற மாப்பிள்ளை எங்கடை பூங்கோதைக்குச் சரிவராது.' 

'அதிலை பிரச்சனையில்லை, பிடிக்காட்டி கலியாணம் செய்ய வேண்டும் எண்டில்லைத்தானே, ஆனால் நான் என்ரை பழக்க வழக்கங்களைத் தெரியப்படுத்த வேண்டும். எனக்கு ஒரு நாக்கு..  சொல்வேறு, செயல் வேறாக நடக்கத் தெரியாது.'

'அது சரி, ஆனால் ஒரு பெண் தனக்கு வரும் மாப்பிள்ளை இப்பிடியெல்லாம் இருக்க வேணுமென்ற  கற்பனைகளுடன் இருப்பாள். அந்தக் கற்பனைகளைக் கலைப்பது முறையல்ல.' என்று சுகந்தி சதாவைக் கூட்டிக்கொண்டு வந்தவர்களைப் பார்த்து, தன் கூற்றுக்கு ஆதரவு தேடினாள்.
அவர்களுள் ஒரு பெண்மணி கூறினாள்,

'நீங்கள் சொல்வது நியாயமானதுதான். தன்னோடை வரும்படி சதா கேட்டதாலை வந்தோம், இனி உங்கடை விருப்பம்.. உடனே பதில் சொல்ல வேண்டுமென்றில்லை, யோசிச்சுப் போட்டுச் சொல்லுங்கோ!'
அப்போ சுகந்தி உள்ளே சென்று ஏற்கனவே தயாராக இருந்த பலகாரங்களைக் கொண்டு வந்து உபசரித்துவிட்டு, தேநீர் தயாரித்தாள்.

'என்னைப்பற்றி முழுதாக உங்களுக்குத் தெரியுமோ?' கேட்டாள் பூங்கோதை.

'தெரியும்!' என்றான் சதா.

'என்ன தெரியும்?

'தெரியுமென்றால் பிறகேன் அதை? விடுங்கோ!'

'எனக்குக் கண் தெரியாது!'

'எனக்குத் தெரியும்'

'கலியாணம் கட்டிப் பிள்ளையும் இருக்கு!'

'கட்டினவர் ஏமாற்றிவிட்டுப் போய் எங்கோ ஒரு வெளிநாட்டில் கலியாணம் செய்திருக்கிறார்.' சதா சொன்னான்.

'எல்லாம் தெரிஞ்சும் நீங்கள் என்னைத் திருமணம் செய்ய விரும்புறீங்களோ?' அவன் மனதிலிருப்பதை அறியக் கேட்டாள் பூங்கோதை.

'விரும்பிறன்... முழுதா விரும்பிறன்... ஓமெண்டால் இன்றைக்கே கலியாணம் செய்ய நான் தயார்.... ஆனால் என்ரை குடியை விடும்படிமட்டும் யாரும் வற்புறுத்தக்கூடாது.

'அது உங்கடை சுதந்திரம்!' பதில் சொன்னாள் அவள்.

நவத்துக்கும் மனைவிக்கும், மதுவை நேசிக்கும் ஒருவரை, பூங்கோதைக்கு மணமுடித்துக் கொடுக்க இஸ்டமில்லாதபோதும் பூங்கோதை இதைக் கருத்திற்கொள்ளாமல் அவரை மணப்பதில் ஈடுபாடு கொண்டவள் போல இருந்ததால் அவர்கள் தடை சொல்லாமல் இருந்தார்கள்.

'இன்னொரு விடயம் சொல்ல மறந்து போனன்....' என்று தொடங்கிய சதா, 'அதிகம் குடிச்சதால் அதுஇது கெட்டுப் போயிருக்கும் என்று சந்தேகப்படத் தேவையில்லை, டொக்டர் கரன்ரி பண்ணியிருக்கிறார். வேணுமென்றால் நீங்களே போய்க் கேட்கலாம்.' என்று ஒழிவு மறைவின்றிக் கூற, நவம் இடையில் குறுக்கிட்டு, 'சீ...சீ.. அதெல்லாம் நாங்கள் கேட்கவில்லை.' என்று அவன் உள்ளத்து உயர்வை மனதுக்குள் வியந்தான்.



1.2. வாழ நினைத்தால் வாழலாம்

தொழிற்சாலையில் இடைவேளை நேரம் நவத்தைக் குரு சந்தித்தான்.

நீண்டகால நண்பர்கள், குடும்பமாகிப் பிள்ளைகள் பெற்ற பின்பு குடும்பநண்பர்களாய்  நெருங்கிப் பழகியவர்கள்.

இடையில் ஏதோ ஒரு சிறு மனஸ்தாபம், போக்குவரத்து நின்றுவிட்டது.

சந்திக்கின்ற இடங்களில் சிரிப்பதுடனும் ஓரிரு வார்த்தைகளுடனும் அவர்கள் பழக்கம் தொடர்ந்தது. ஒன்றாக வேலை செய்வதால் முகத்தைத் திருப்பிக் கொண்டிருப்பது கடினமாக இருந்தது.

ஏதோ ஒரு மனஸ்தாபம், அதுவும் என்னவென்று சொல்லத் தெரியாதளவுக்கு மறந்து போன நிலையில், ஒன்றாக இருந்து, உண்டு, களித்து மகிழ்ந்தவர்கள்... யாரோ அந்நியர் போல நடந்து கொள்வது மனதுக்குச் சங்கடமாக இருக்க, யார் முதலில் தொடங்குவது என்ற போராட்டம் நெஞ்சத்தில் நீண்ட நாட்களாகவே வளர்கையில், நவத்தின் மகள் பெரியவளாக, அதற்குக் குருவின் குடும்பத்தை அழைக்க, அவர்களும் கோப தாபங்களை மறந்து வந்து, கொண்டாட்டங்களில் கலந்து உதவிகள் புரிந்திருந்தனர். அதன்பின் நல்லது கெட்டதுக்கு வந்து போவது, கண்ட இடங்களில் கதைப்பதென்று சற்று இடைவெளியுடன் கூடிய நட்பாகத் தொடர்ந்தது.

குரு, சில நாட்களாக முகம் வாடிப்போயிருந்தான். காரணத்தைக் கேட்க, முதலில் சொல்லாமல் ஒன்றுமில்லை என்று சமாளித்தான். பிறகு....

'வீட்டிலை நிம்மதியில்லை... மாறிமாறி ஒரே பிரச்சனை...' நவம் அவன் சொல்வதை உன்னிப்பாகக் கேட்டான்.

வெளிநாட்டுக்கு வந்து எங்களில் பலரும் இப்பிடிப் பல பிரச்சனைகளை மனதிற் தாங்கிக்கொண்டு தவிப்பதும் தமக்குள்ளே கண்ணீர் விட்டுத் துடிப்பதும் வழக்கமாகிவிட்ட விடயமாகிவிட்டது. ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லலாம், செய்யக்கூடிய உதவி என்றால் அதையும் செய்யலாம். அதற்குமேல் அவரவர் பிரச்சனையை அவரவர்தான் தாங்கிச் சுமக்க வேண்டும். பிரச்சனைகள் எந்தக் காலத்தில் எப்ப வரும் என்று சொல்ல முடியாதளவுக்கு வெளிநாட்டு வாழ்க்கை சிக்கல் மிகுந்ததாயும் அமைந்துள்ளது. அதை மேலும் குழப்பிச் சிக்கலுக்கு மேற் சிக்கலை உண்டு பண்ணுமளவுக்கு எங்கள் புதுப்புது ஆசைகளும் நடைமுறைகளும் பெருகி வருகின்றன.

'பிள்ளைகள் சொல்வழி கேட்குதுகள் இல்லை!' இது அநேகமான பெற்றோர் மனவேதனையுடன் கூறும் வார்த்தைதான் என்றாலும் குருவின் குரலில் தாங்கமுடியாத சோகம் கொட்டிக் கிடந்தது.

'துவாரகா.... எத்தனை வயது? சீ... என்ன பிள்ளையடா இவள்? ஒன்பதாம் வகுப்பிற் படிக்கிறாள். நாங்கள் என்னவெல்லாம் கற்பனை செய்து கொண்டிருக்கிறம்.... அவள்...!' அவனாற் தொடர்ந்து சொல்லமுடியவில்லை, தொண்டை அடைத்துக் கொண்டது.

'குரு! அமைதியாய் இரு! விதி... உன்னை மட்டுமில்லை எல்லாரையும்தான் போட்டு உலைக்குது. நாட்டிலை பார்! எங்கடை மக்களுக்கு வந்த சோதனையைப் பார்! மாறி...மாறி.. சாணேற முழம் சறுக்கிறது போல, சோதனைக்கு மேலை சோதனை.... செய்யும் முயற்சிகள் எல்லாம் பலனளிக்காமல்..... இழப்புக்குமேல் இழப்பும் உயிர்ப்பலியுமாக, இரத்தம் சொட்டும் கண்ணீர்க்கதையாக நாளுக்கு நாள் நீண்டுகொண்டு செல்லும் விதியின் சித்திரவதைகள்..... அங்குமிங்கும் நாம் படும் அவலங்கள்... வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத குருதிக் கோலங்கள்!

அழுது கவலைப்பட்டு ஆவதொன்றுமில்லை, மனதைத் தளர விடாதை! விடாமுயற்சி விடிவைத் தரும். ஓடுறது மாதிரி ஓடி, அடிக்கிற இடத்திலை அடிப்பதும் யுத்த தந்திரம்தான், விட்டுப்பிடி சுதந்திரம் கூடி ஒரு சில பிள்ளைகள்  தலை, கால் தெரியாமல் நடக்கிறதையும்  நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கவேண்டிக்கிடக்கு! பெற்றமனம் குழறுவதும் குமுறுவதும் இந்தப் பிள்ளைகளுக்குப் புரிவதில்லை.'

'ஆரோ பெடியளோடை கண்டனாங்கள் என்று கதை வந்ததும் நான் நம்பேல்லை. ஆனால்.... இப்ப கைமீறிப் போறளவுக்கு விசயம் வந்துவிட்டது. ஒன்றும் கதைக்க முடியவில்லை. ஏதும் கேட்டால் பத்திரகாளிமாதிரி நிற்கிறாள்.

'உண்மைதான்... இப்ப என்ன செய்யப்போறீங்கள்?' என்று கேட்கிறாள்... இந்த நாட்டிலை அடித்து அறைக்குள் பூட்டி வைக்க முடியுமே?

வீட்டிலை ஒரே சண்டை... ஒழுங்கான சமையல், சாப்பாடு ஒன்றுமில்லை... வீடே போர்க்களமாய்க் கிடக்கு!'

'யார் பெடியன்?' கேட்டான் நவம்.

'நான் விசாரிக்கேல்லை... காதலிக்கிற வயதேயிது?'

'குரு! இப்ப எல்லாமே தலைகீழா மாறியிட்டுது, இதை நீ புரிஞ்சு கொள்ளவேண்டும். இது யாரும் எதையும் செய்யலாம் என்ற காலம்... சுதந்திரம்! சுதந்திரம்...! அழிவுக்குரிய பாதையை நிர்ணயிக்கும் பயனில்லாத சுதந்திரம். அறிவைப் பாவிச்சு வாழ்பவன் பிழைத்துக் கொள்வான். அப்படி நடவாதவன் அவஸ்தைப்பட வேண்டியதுதான். நாங்கள் என்ன செய்ய முடியும்? நீ அழுகிறாய்! சாப்பிடாமல் இருக்கிறாய்! வேலை செய்ய முடியாமல் மனம் குழம்பிப் போய் நிற்கிறாய்! உன் பிள்ளையளுக்கு அது புரியேல்லை. உன்னுடைய பணம் அவர்களுக்கு வேணும். வேறை எதையும் உன்னிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இதுக்குப் பெயர் 'விதி' புரிஞ்சுகொள்!'

'மானம் போகுது! வெளியிலை தலை காட்ட முடியேல்லை!' அடிமனதின் குமுறலாய் வந்தன குருவின் வார்த்தைகள்.

'ஒன்றுமே நடக்காதது போல கொஞ்சநாள் மனதை அடக்கிக் கொண்டிரு! அடக்க முடியாதபோது சாமியறைக்குப் போய் தேவாரம், திருவாசகம் ஏதாவது ஒன்றை உரத்துப்படி! அமைதியாக இரு! எல்லாம் தானாகவே வழிக்கு வரும்!'

'போன மானம் என்னண்டு நவம் திரும்பி வரும்?' அவன் குரலில் கவலை தொனித்தது.


'
நீ வேணுமெண்டு ஏதும் செய்தனியேசுதந்திரமான நாடு.. பிள்ளையளை அடிச்சுத் திருத்தச் சட்டம் இடம் தராதுவாழ்க்கை என்றது எல்லாருக்கும் வந்தமையாதுபொறுமை வெல்லும்,  பொறுபொறுபொறுத்தார் அரசாள்வார்!' என்று குருவின் கையை ஆதரவோடு பிடித்து ஆறுதல் பகிர்ந்தான் நவம்

Keine Kommentare: